புதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்


            தமிழ்க் கவிதை மரபு சங்க காலம், சங்க மருவிய காலம், பக்தி இயக்கக் காலம், காப்பியக் காலம், பிரபந்தக் காலம், தற்காலம் என நீண்ட வரலாற்றைக் கொண்டு திகழ்கிறது. இவ்வரலாற்றைப் பார்க்கும்போது காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ - உள்ளடக்க மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககால கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடலையும், சங்க மருவிய கால கவிதைகள் வெண்பாவையும், காப்பியக் கால கவிதை, பத்தி இலக்கியக் கால கவிதை, பிரபந்த இலக்கியக் கால கவிதை முறையே தொடர்நிலைச் செய்யுள், விருத்தப்பா மற்றும் அனைத்து பாவகைகளையும் அதன் இனங்களையும் கொண்டு கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கால மாற்றத்திற்கேற்பத் தமிழ்க்கவிதை வடிவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
            பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் பல மாற்றங்கள் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தன. இம்மாற்றம் தமிழ்க்கவிதை அமைப்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலைத்தேயக் கவிதையிலாளர்களான வால்ட் விட்மன், எஸ்ரா பவுண்டு, டி.எஸ். எலியட் முதலியோரின் புதிய முயற்சிகள் தமிழ்க்கவிதை மரபிலும் அதன் பாதிப்பை உண்டாக்கியது. இந்தப் பின்புலத்தில் வசன கவிதை, புதுக்கவிதை தோற்றம் பெற்றன. தமிழில் முதல் வசன கவிதை முயற்சியாகப் பாரதியாரின் காட்சிகள் கவிதையைக் குறிப்பிடலாம். பாரதி பல்வேறு யாப்பு வடிவிலான கவிதைகளை எழுதினாலும் அவ்வபோது நிகழும் புது முயற்சிகளையும் தம் கவிதை வடிவத்தில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.
            பாரதியைத் தொடர்ந்து மணிக்கொடி பரம்பரை, எழுத்து பரம்பரை, வானம்பாடி பரம்பரை என மூன்று பரம்பரைகள் தோன்றியன. இம்மூன்று பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்கள் - எழுத்தாளர்கள் பதுக்கவிதையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இம்முயற்சிகளின் வழிப் புதுக்கவிதை பல பரிமாணங்களை அடைந்தது.
            தமிழ்ச் சூழலில் புதுக்கவிதையின் பரிமாணங்கள் குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. புதுக்கவிதை இலக்கண வரையறைக்குட்பட்டு வந்த தமிழ்க் கவிதை மரபில் இருந்து வேறொரு பரிமாணத்தைப் பெற்றது என்றும், புதிய பரிமாணத்தைப் பெற்றுவிட்டாலும் மரபு கவிதையின் தாக்கமும், அதன் கூறுகளும் இதில் காணக்கிடக்கின்றன என்றும் இருவேறு நிலைபாட்டினர் வாதிட்டனர். இந்நிலைபாடுகள் பல சுவையான தகவல்களைத் தருகின்றன. இது குறித்து வல்லிக்கண்ணன் தமது புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
            புதுக்கவிதை குறித்த சுவையான விவாதத்திற்கு அடித்தளம் இட்டவர் க.நா.சுப்பிரமணியன். க.நா.சுப்பிரமணியன் மயன் என்ற புனைபெயரில் சூறாவளியில் ஒரு வசன கவிதையை எழுதினார். இந்த வசன கவிதையைக் குறித்து மகராஜ் விமர்சித்து எழுதினார். இந்நிகழ்வு புதுக்கவிதை குறித்த விமர்சனத்திற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அதைத் தொடர்ந்து எஸ்ஸின் வசன கவிதை என்னும் பரிகாசப் பாடல், அப்பரிகாசப் பாடலுக்குச் சீனிவாச ராகவனனின் பதில், சீனிவாச ராகவனனின் பதிலுக்குக் கு.ப.ராஜகோபாலனின் பதில் எனக் கவிதை குறித்த விவாதங்கள் வளர்ந்துகொண்டே போயின. புதுக்கவிதையை அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு செல்வதற்கு இவ்விவாதங்கள் பெரிதும் உதவின. இவ்வகையிலான விவாதங்கள் புதுக்கவிதைக்கு இலக்கண வரையறை உண்டா? இல்லையா? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாணும் போக்குக்கு உறுதுணையாகவும் இருந்தன.
            புதுக்கவிதைக்குத் தமிழ் யாப்பின் தேவை தேவையின்மை குறித்துப் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தாலும், புதுக்கவிதைக்கெனத் தனி இலக்கணத்தை யாப்பு நூல் வகுத்துள்ளது. இதையடுத்து, புதுக்கவிதை இலக்கணம் என்னும் நூல் புதுக்கவிதை முழுமைக்கும் இலக்கணம் சுட்டுகிறது. இவ்வாறு தனியே புதுக்கவிதைக்கு இலக்கணம் வகுக்கும் முயற்சியிலிருந்து சிறிது மாறுபட்டு, ஏற்கனவே வகுக்கப்பெற்றுள்ள இலக்கண வரையறைக்குள் புதுக்கவிதையை அடக்கும் போக்குகளும் இங்குத் தொழிற்பட்டுள்ளன. இப்போக்குகளைப் பின்வரும் நிலைகளில் பகுத்து நோக்கலாம்.
-     தமிழ்க் கவிதையிலாளர்களின் நிலைப்பாடு
-     யாப்பு நூல் : புதுப்பா இலக்கணம்
-     புதுவகையான முயற்சி : புதுக்கவிதை இலக்கணம்
-     மரபிலக்கண வரையறை : புதுக்கவிதையைக் கட்டமைத்தல்
தமிழ்க் கவிதையியலாளர்களின் நிலைப்பாடு
            தமிழ்க் கவிதையியலாளர்கள் இருவகை நிலைப்பாடுகளுடன் இருந்தனர். புதுக்கவிதைக்கு யாப்பமைதி உண்டு; யாப்பமைதி இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா., சி.சு.செல்லப்பா, தொ.மு.சி.ரகுநாதன், சி.மணி, பிரமிள் முதலானோர் யாப்பமைதி உண்டு. ஆனால் அவை ஒரு சில இடங்களில் நெகிழ்ச்சியடையலாம் என்கின்றனர். க.ந.சுப்பிரமணியன், ந.பிச்சமூர்த்தி, வானம்பாடி எழுத்தாளர்கள் முதலானோர் யாப்பமைதியை உடைத்துக் கொண்டு செல்லக்கூடியது புதுக்கவிதை எனக் கம்பீரமாகக் குறிப்பிடுகின்றனர்.
            சூறாவளியில் வசன கவிதையின் தனித்தன்மைகளை விளக்கிச் செல்லும் கு.ப.ரா. அதற்கு யாப்பமைதி உண்டு என்கிறார்.
            வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மா விளங்காய் தேமாங்கனி            எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேறாக இருக்கும். வசன கவிதைக்கும்      எதுகை மோனை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம்          உள்ளடக்கினது கவிதை. அது அவற்றை இஷ்டம்போல் மாற்றிக் கொள்ளும்.   முதலில் உண்டாக்கின படியே இருக்க வேண்டும் என்றால் இருக்காது (சி.சு.செல்லப்பா,             தமிழில் இலக்கிய விமர்சனம், ப. 170)
கு.ப.ராவின் இக்கருத்து புதுக்கவிதைக்கும் பொருந்தும். எதுகை, மோனை முதலான தொடைகளும், மா விளங்காய், தேமாங்கனி போன்ற வாய்பாடுகளும் கட்டாயம் புதுக்கவிதையில் இடம்பெற வேண்டும். இவற்றைக் கவிஞன் தன் விருப்பம்போல் மாற்றிக் கொள்ளலாம். கு.ப.ராவின் இந்தப் பதிலைச் சுட்டிக்காட்டும் சி.சு.செல்லப்பா வசன கவிதைக்குரிய இலக்கணமாக இருந்தாலும் அதைப் புதுக்கவிதைக்குரிய இலக்கணமாகவும் கொள்ளலாம் என்கிறார்.
            வசன கவிதைக்கான சில இலக்கணம் அம்சங்களை கூற ஒருவர் முற்படும்போது    புதுக்கவிதைக்கான சில நியதிகளையும் அதில் நாம் காண்கிறோம். கு.ப.ரா வசன கவிதை    பற்றி   சொன்னாலும் புதுக்கவிதை பற்றிய விளக்கமாவே அது இருக்கிறது (மேலது, ப.   172).
இக்கருத்து இதனை உறுதி செய்யும்.
            நவீன இலக்கியச் சிந்தனை மரபில் முக்கியமானவராகக் கருதப்பெறுபவர் புதுமைப்பித்தன். இவர் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது அது யாப்பு இலக்கண மரபுகுட்பட்டவையாக வரவேண்டும் என்கிறார். புதுமைப்பித்தன் வசன கவிதை புதுக்கவிதை தன்மைகளில் கவிதை எழுதாமல் மரபுக் கவிதையின் அமைப்பிலேயே தன் கவிதையை எழுதியுள்ளார்.
புதுமைப்பித்தன் யாப்பு பற்றிக் கூறும்போது ‘யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு             அழுத்தம் கொடுக்கும் ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒருதன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைச் சேர்ப்பதல்ல’ என்கிறார். (மேலது, ப. 173).
இவ்வாறு யாப்புக்கும் கவிதை நடைக்கும் உள்ள உறவு பற்றிய தனது நிலைப்பாட்டை விளக்கிச் செல்கிறார்.
            புதுமைப்பித்தனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தொ.மு.சி.ரகுநாதனும் புதுமைப்பித்தனின் கருத்தினை ஒத்தவராகவே இருக்கின்றார். ‘யாப்பை மீறிக் கவிதை எழுதக் கூடாது என்ற கருத்துடையவர் அல்லர் ரகுநாதன். யாப்பு, எதுகை, மோனையின் பயனை அறிந்து கொண்டு தேவையான இடத்தில் மீறிப் புதிய வடிவில் - ஓசை நயத்துடன் கவிதை எழுத வேண்டும் என்ற கருத்துடையவர் ரகுநாதன். இது புதுமைப்பித்தனில் இருந்து அவர் உருவாக்கிக் கொண்ட அபிப்ராயம்’ (ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு, ப. 106). இக்கூற்று புதுக்கவிதைக்கு யாப்பு முதலிய கூறுகள் வேண்டும் என்ற கருத்துடையவர் தொ.மு.சி., என்பதைத் தெளிவுபடுத்துகிறது. புதுமைப்பித்தனின் கருத்து நிலைப்பாட்டிலேயே நின்று தனது கவிதையை ரகுநாதன் எழுதியுள்ளார்.
            தமிழ் யாப்பியலுக்கும் புதுக்கவிதைக்கும் இடையிலான தனது நிலைப்பாட்டைப் பிரமிளும் தெளிவுபடுத்தியுள்ளார். ‘இதுதான் புதுக்கவிதை என்று சில உதாரணங்களைக் காட்டித்தான் இனி யாப்பு இதைக் குறிப்பிடும். அகவல் என்ற கிட்டதட்ட வசன வடிவமாகவே இருக்கிற ஒரு வடிவை அங்கீகரித்துள்ள தமிழ் யாப்பு புதுக்கவிதை முயற்சிக்கு இடம்விடாது என்பது தவறு’ (ஞானக்கூத்தன், கவிதைக்காக, ப. 78) என்று சுட்டிக்காட்டுகிறார்.
            எழுத்து பத்திரிகையில் வெளிவந்துள்ள பல புதுக்கவிதைகள் மரபான யாப்புருவத்தைக் கொண்டிருக்கின்றன. ந.பிச்சமூர்த்தி, சி.மணி, தி.சோ.வேணுகோபால், எஸ்.வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலரும் மரபான யாப்புருவத்தைத் தம் கவிதையில் கையாண்டுள்ளனர். சி.மணியின் நகரம் என்னும் கவிதையைக் குறித்து மதிப்பிடும் சி.கனகசபாபதி அது வஞ்சிப்பா வகையிலான யாப்புருவத்தை ஆங்கே சுட்டிச் செல்கிறது. இந்த வஞ்சிப்பா வடிவிலான இக்கவிதை மதுரைக்காஞ்சியின் சாயலை நமக்கு நினைவூட்டுகிறது என்று மதிப்பிட்டுள்ளார்.
            புதுக்கவிதையின் பிதாமகனாகக் கருதப்படும் ந.பிச்சமூர்த்தி தொடக்க காலங்களில் மரபான யாப்புருவத்தைக் கையாண்டு கவிதைகள் இயற்றியுள்ளார். பிற்காலங்களில் தான் புதுக்கவிதையைப் படைத்துள்ளார். ‘பிச்சமூர்த்தி 1937ஆம் ஆண்டிலிருந்து 1964ஆம் ஆண்டு வரைக்கும் இவர் செய்யுட்களில் கலிவிருத்தங்களே அதிகம். முப்பத்தைந்தில் பத்தொன்பது. 1964இல் கூட கலிவிருத்தம் எழுதியிருக்கிறார்’ (மேலது, ப. 108) என்று ந.பிச்சமூர்த்தியின் மரபு கவிதை முயற்சியை ஞானகூத்தன் சுட்டிக்காட்டுகிறார். இதையே சி.மணியும் எடுத்துக் காட்டியுள்ளார்.
            ந.பிச்சமூர்த்தி எழுதிய தொடக்க கால கவிதைகள் பல சுவையான விவாதங்களுக்குக் களம் அமைத்து தந்துள்ளது. இவருடைய வசன கவிதை யாப்பியல் கட்டமைப்புக்கு உட்பட்டது, உட்படாது என்று இருவேறு கருத்துகள் இருந்தன. தொ.மு.சி. குறிப்பிடும்போது, ‘ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., க.ந.சு., போன்ற மூவரும் ஆங்கில இலக்கிய புலமையை அடிப்படையாகக் கொண்டே கவிதைகளைப் புனைய முற்பட்டனர் என்கிறார். எனினும் இம்மூவரில் மரபான யாப்பியல் கட்டமைப்பிலான கவிதை முயற்சிகளை மேற்கொண்டவர் ந.பிச்சமூர்த்தி தான். இவருடைய கவிதையில் யாப்பும் இல்லை; கவிதையும் இல்லை’ (ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு, ப. 107) எனக் கடுமையாகத் தொ.மு.சி.ரகுநாதன் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் தொ.மு.சியோடு நின்றுவிடாமல் தொடர்ந்தது.
            புலவர் குழந்தை ந.பிச்சமூர்த்தியின் தாயும் குஞ்சும் என்னும் 157 வரிகளைக் கொண்ட கவிதையின் முதல் பகுதியை எடுத்துக் கொண்டு அது யாப்பியல் கட்டமைப்புக்குள் வரவில்லை என விமர்சனம் செய்துள்ளார். புலவர் குழந்தையின் விமர்சனத்திற்குச் சி.சு.செல்லப்பா பதிலளித்துள்ளார்.
பிச்சமூர்த்தி மரபு வழிக்கவிதை புனைய முனைந்து தோற்று செழுமையான கவிதைகளைப் புனைய முனைந்து தோற்று படைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தால், சோர்வால், தோல்வி மனப்பான்மையால் பல ஆண்டுகள் ஒதுங்கி நின்று விட்டு பிறகு தோல்வியை மூடி மறைக்கவும் சோர்வைத் தேற்றிக் கொள்ளவும் வெர்ஸ் லிப்ரே முறை பற்றி பரிசீலனை நடத்தி அதில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிட்டது போலக் காட்ட தன் மரபு வழி (தோல்வியுள்ள) கவிதைகளையும் புதுக்கவிதை இனத்தோடு சேர்த்து விட்டார். (சி.சு.செல்லப்பா, தமிழில் இலக்கிய விமர்சனம், ப. 100)
சி.சு.செல்லப்பாவின் கருத்து பிச்சமூர்த்தியை விமர்சிக்கும் தன்மையில் இருந்தாலும் அவரின் மரபுக் கவிதை முயற்சியைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
            ஜூன் 1969 தாமரை இதழில் ஜெகன் புதுக்கவிதையின் உருவம் என்றொரு கட்டுரையில் புலவர்             குழந்தையைப் போல் பிச்சமூர்த்தியை விமர்சித்துள்ளார். ‘பிச்சமூர்த்திக்கு மரபு வழிக்கவிதையில் ஒலியின்பத்தில் லயிப்பும் ஈடுபாடும் இருந்தும் தமிழ்மொழியில் பயிற்சி இல்லாத காரணத்தினால் எதுகை, மோனை, சீர், தளை முதலியன பல இடங்களில் கைகொடுக்கவில்லை. அவரது ஒலியின்ப அறிவுக்கு மொழியும் உதவியிருந்தால் கவிதை சுவை மிகுந்ததாக அமைந்திருக்க முடியும்’ (மேலது, ப. 116) என்று ந.பிச்சமூர்த்தியின் கவிதை உருவமைப்பு குறித்து ஜெகன் விளக்கியுள்ளார்.
            புலவர் குழந்தை, ஜெகன் இருவருக்கும் பதிலளிக்கும் நிலையில் சி.சு.செல்லப்பாவின் கூற்று பின்வருமாறு அமைகின்றது.
இதுவோ ஒத்த சிந்தடிகளால் ஆன செய்யுள், ஆசிரியத்தளைகள், இயற்சீர் வெண்தளைகளால்      ஆன வரிகள். எழுத்து இலக்கணம் சரியாக இருக்கிறது. எனவே சிந்தடியால் ஆன ஆசிரியப்பா என்று வைத்துக் கொள்ளட்டுமே. ஏன் இணைக்குறள் ஆசிரியப்பாவில் எல்லாம் வரலாமே. அளவொத்த சிந்தடியால் ஆன ஒரு வகை இணைக்குறளாசிரியப்பா என்று கொள்ளலாமே.  (மேலது, ப. 210)
என்று பதிலுரைத்துள்ளார். சி.சு.செல்லப்பாவின் இப்பதில் புதுக்கவிதைக்கு இலக்கண வரையறையும், யாப்பியல் கூறும் உண்டு என்பதைப் புலப்படுத்துகிறது.
            ஞானகூத்தன், சி.சு.செல்லப்பா, சி.மணி முதலானோர்களின் கருத்துகளை ஒப்ப வைத்து நோக்கும்போது ந.பிச்சமூர்த்தியின் மரபு வடிவிலான கவிதை முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும், அவை யாப்பியல் கூறுகளைக் கொண்டிருந்தன என்பதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் அதைப் புதுக்கவிதை என்று கூறிக் கொண்ட பிச்சமூர்த்தியின் செய்கை அபத்தமாக உள்ளது.
            சி.மணி தமிழ் யாப்பியல் புறநடைகளைப் புதுக்கவிதையோடு ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். இவ்வாராய்ச்சியின் வழிச் சில முடிவுகள் கிடைத்துள்ளன. தமிழ்க் கவிதை மரபில் புதுப்புது வடிவங்கள் தோற்று போவது புதிதல்ல. கவிதை ஒவ்வொரு காலத்திற்கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளது. எனவே ‘புதுக்கவிதை மரபானதே; யாப்புக்கு உட்பட்டதே; புதுக்கவிதை மரபானதே என்பதை ஒப்புக் கொள்ள விரும்புவோரும் அது யாப்புக்கு உட்பட்டது என்பதை மறுக்கலாம். இதனால் இக்கருத்து விளக்கம் தேவைப்படுகிறது’ (சி.மணி, யாப்பும் கவிதையும், ப. 85) என்று குறிப்பிட்டுள்ளார்.
            எழுத்து பத்திரிகையில் எழுதி வந்த கவிஞர்கள் தங்களின் கவிதைகளைப் புதுக்கவிதைகள் எனக் கூறிக்கொண்டாலும் அவை மரபுக் கவிதைகளின் சாயலைப் பெற்றிருந்தன என்பதைச் சி.மணியின் கருத்து வழி அறியலாம்.
            ந.பிச்சமூர்த்தியின் காதலின் இரவு குறுங்காவியம் முதல் தமிழ் நாடனின் சந்தம்இ சி.மணியின் மூகமூடி, தருமுசிவராமுவின் கால நினைவு, தி.சோ.வேணுகோபாலனின் எங்கிருக்கிறோம், வைத்தீஸ்வரனின் கருப்பு வீதி, சுந்தர ராமசாமியின் மேஸ்திரிகள் ஈறாகப் பல கவிதைகள் மரபான யாப்பு வடிவங்களில் காணப்பட்டன. இவை முறையே கலிவிருத்தம், கலித்துறை, நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா, வெண்செந்துறை, கலிவிருத்தம், வஞ்சித்துறை மற்றும் செந்துறை வடிவிலான கவிதைகளாக உள்ளன என்கிறார் சி.மணி. ஒரு சில கவிதைகளை இன்ன பாவகையிலான கவிதை என்று இனம் காண முடியாத போக்கும் இருந்தது. அவற்றை ஒருபுடை ஒப்புமை நோக்கி ஒரு குறிப்பிட்ட இனத்தில் சேர்க்க வேண்டியவை என்ற கருத்தையும் சி.மணி முன்வைத்துள்ளார். அவ்வகையில் ந.பியின் வழித்துணை, சி.மணியின் நகரம், துரை சீனிச்சாமியின் தீராப்பசி, பொன்னுசாமியின் பச்சை முதலானோரின் கவிதைகளை ஒருபுடை ஒப்புமை என்னும் போக்கில் அணுகி ஒரு குறிப்பிட்ட பா இன வகைக்குள் அடக்க வேண்டும் என்கிறார்.
            இவ்வாறாகப் புதுக்கவிதையின் யாப்பியல் தன்மை குறித்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் புதுக்கவிதை முந்தைய கவிதை வடித்திலும் யாப்பியலிலும் இருந்து வேறொரு பரிமாணத்தை அடைந்துவிட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் மரபின் கூறுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
யாப்பு நூல் : புதுப்பா இலக்கணம்
            தமிழ்மொழி ஐந்திலக்கண மரபைக் கொண்டது. அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன. இவ்வைந்திலக்கண வகைகளுள் மிகுதியான அளவு இலக்கண நூல்கள் தோன்றியது யாப்பிலக்கணத்திற்கு மட்டுமேயாகும். அகத்தியனார், தொல்காப்பியனார், சங்க யாப்புடையார் முதலாக இலக்கண விளக்கம் ஈறாக இருபதுக்கும் மேற்பட்ட யாப்பு நூல்கள் தமிழில் தோன்றியுள்ளன. மேலும் இருபதாம் நூற்றாண்டில் யாப்பதிகாரம், தொடையதிகாரம், யாப்பு நூல் முதலான யாப்பிலக்கண நூல்களும் தோன்றியுள்ளன. இந்நூல்களின் தோற்றத்தைப் பார்க்கும்போது ஏனைய நான்கிலக்கண நூல்களை உருவாக்குவதைக் காட்டிலும் யாப்பிலக்கணங்களுக்கான நூல்களை உருவாக்குவதிலே புலவர்கள் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர். யாப்பிலக்கணங்களை வகுத்த நூலாசிரியர்கள் முந்து நூலின் வழியே தம் நூலை அமைத்துள்ளனர். காலந்தோறும் புதுப்புது யாப்பு நூல்கள் தோன்றினாலும் அவற்றுள் இடையில் தோன்றிய யாப்பு மாற்றங்களுக்குரிய இலக்கணங்களை வகுத்துச் சொல்லும் போக்கு இல்லை. ஆனால் இப்போக்கிலிருந்து மாறுபட்ட நூலாகச் சரணவன் தமிழனின் யாப்பு நூல் திகழ்கிறது.
            பா வகைகளை வரையறுப்பது முதல் முந்தைய யாப்பிலக்கண நூல்களிலிருந்து மாறுபடுகிறது. முந்தைய யாப்பு நூல்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் மருட்பா என வகுத்துச் செல்லும். அவ்வகையில் இருந்து முதல் நான்கையும் மூன்றாகவும், கொண்டு அவற்றோடு புதுப்பா (புதுக்கவிதை), திரைப்பா, இசைப்பா என மூன்றையும் சேர்த்து பா வகை ஆறு என்கிறது யாப்பு நூல். மேலும் சில பாவினங்களின் பெயரையும் மாற்றியமைத்துள்ளது. இவ்வாறு யாப்பு நூலின் புதுமைகளைச் சுட்டுவது மட்டும் இந்நூலின் நோக்கமல்ல. இந்நூல் சுட்டும் ஐந்தாவது பாவாகிய புதுப்பாவிற்கான இலக்கணங்களைக் கோடிட்டுக் காட்டுவதே இங்கு முக்கிய நோக்கமாகும்.
            சரவணத் தமிழனின் யாப்பு நூல் புதுக்கவிதை குறித்து ஆறு நூற்பாக்களைத் தருகிறது.
1.   நூற்பா புதுப்பா ஓரடி பெறுமே (35)
2.   அசைப்பா தளைப்பா புதுப்பா திரைப்பா
      இசைப்பா ஒளிப்பா அறுபா தமிழ்ப்பா.          (59)
3.   மரபுப் பாட்டெனும் முன்னமை பாக்களின்
      அசை எழுத்து ஒழுங்கும் தொடையும் கருத்தை
      விரும்பும் வீச்சில் சொல்லத் தடுத்தலின்
      அரும்பும் பாவலர் அமைத்தது புதுப்பா.          (138)

4.   உருவக உத்திகள் புதுப்பா வேறு
      திரிபுறு பாடலாம் உரைப்பா வேறு.   (139)
5.   கொடுமையை எதிர்த்துக் கொதிக்கும் நெஞ்சம்
      கடுமையை காட்டச் சிறந்தது புதுப்பா
      அயற்சொல் குறைத்துப் பாலியல் தவிர்த்தால்
      முயற்சி சிறந்து முற்றுப் பெறுமே.                  (140)
6.   அசையொழுங் குடைத்த புதுப்பா எதுகையை
      வசையெனக் கருதினும் அடிவரை யறையாய்
      மோனைச் சொற்களில் முறித்து மடியலாம். (141)
இந்நூற்பாக்கள் புதுக்கவிதைக்கான அடியமைப்பு, பாவகையுள் புதுப்பாவின் இடம், புதுப்பாவிற்கான இலக்கணம், உரைப்பாவிலிருந்து புதுப்பாவின் தனித்தன்மை, புதுப்பா இயற்றும்போது தவிர்க்க வேண்டியவை, புதுப்பாவின் அடிவரையறையைக் கட்டமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் முதலிய செய்திகளைப் புதுக்கவிதைக்குரிய இலக்கணமாக யாப்பு நூல் வகுத்துள்ளது.
புதுவகையான முயற்சி : புதுக்கவிதை இலக்கணம்
            சரவணத் தமிழனின் புதுமுயற்சியைத் தொடர்ந்து இராஜேந்திரனின் புதுக்கவிதை இலக்கணம் (2004) என்ற நூலைக் குறிப்பிடலாம். இந்நூல் புதுக்கவிதைக்கு முழுமையான அளவில் இலக்கணம் கூற முயன்றுள்ளது. முந்தைய யாப்பிலக்கணங்களின் அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. யாப்பிலக்கணம் கூறும் யாப்பு நூல்களைப்போன்று உறுப்பியல், கவிதை இயல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களை இந்நூல் கொண்டுள்ளது.
            முதல் இயலிலேயே தனது புதுமையைக் காட்டி நிற்கிறது இந்நூல். பண்டைய இலக்கண நூல்கள் செய்யுள் உறுப்புகள் என எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று வகைப்படுத்தி உரைக்கும். ஆனால் இந்நூலாசிரியரோ சொல், அடியின் தொடர் எனும் புதிய உறுப்புகளையும் சுட்டி உறுப்புகள் ஐந்து என்கிறார். (சே.ரகுராமன், புதுக்கவிதை இலக்கணம், ஆராய்ச்சியுரை, ப. viii)
            யாப்பிலக்கண நூல்களுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய யாப்புறுப்புகள் இன்றியமையாது யாப்பிலக்கண நூலுள் இடம்பெற்றிருக்கும். இந்த முறையிலிருந்து சிறிது மாறுபட்டு சொல், சீர், அடி, அடித்தொடர், தொடை என்னும் ஐந்து உறுப்புகளை முதன்மை உறுப்புகளாக்கி இருக்கிறது.
            அவற்றுள்,
            சொல்லே சீரே அடியே எனாஅ
            அடியின் தொடரே தொடைவகை எனாஅ
            நுதலிய ஐந்தும் முதலுறுப் பாகும்.                  (நூ.6)
இதில் அடித்தொடர் என்பது யாப்பிலக்கணத்துள் புதுவரவாகும். முதல் உறுப்புகள் ஆறும் எந்தெந்த முறையில் புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ளன என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சீர், அடி, தொடை மூன்றுக்கும் முந்தைய யாப்பிலக்கண நூல்கள் சுட்டிச் செல்லும் தன்மையிலே இவரும் இலக்கணம் செய்துள்ளார்.
            மேலைத்தேயச் சிந்தனையாளர்களின் (கவிதையியலாளர்களின்) வழியே புலப்பட்ட படிமம், குறியீடு போன்ற உத்தி முறைகளைத் துணை உறுப்புகளாக ஆக்கியிருக்கிறார் இராஜேந்திரன். படிமம், குறியீடுகளின் வகைகளைப் பகுத்து அதற்கு இலக்கணமும் கூறுகின்றார். படிமம், குறியீடுகளை மரபிலக்கணம் வழிவந்த உருவகம், உள்ளுறையின் நீட்சியாகக் கருதுகின்றார். இவை இரண்டும் இல்லாமல் கூட கவிதை மிகச் சிறப்பாக அமையும். மேலும் அவற்றைக் கருத்து வெளிப்பாட்டு உத்தி முறைகளாகச் சுட்டுவர் சான்றோர் என்கிறார்.
            வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா முதலிய பாக்களைப்போல் அடித்தொடர் பா, கருத்துக் கோவைப்பா, தொடர் நிலைப்பா, சித்திரப்பா, குறும்பா, பொதுப்பா என ஆறு வகைகளைக் கவிதையின் வகைகளாக்கி அவற்றிற்கும் இவர் இலக்கணம் வகுத்துள்ளார்.
            அடித்தொடர் பாவே கருத்துக் கோவையே
            தொடர்நிலைப் பாவே சித்திரப் பாவே
            குறும்பா தன்னொடு பொதுவென வரூஉம்
            கவிதை வகையே மூவிரண் டாகும்.               (52)
பாக்களுக்குரிய இலக்கணம் சீர், அமைப்பு, அடிவரையறை கவிதையின் அமைப்பு முறை முதலியவற்றை இந்நூல் நிரல்பட தொகுத்தளிக்கிறது.
            கவிதைக்கு மிக இன்றியமையாத ஒன்று பாடுபொருள். அப்பாடு பொருளை இன்றைய மனித வாழ்க்கையோடு தொடர்புடையவைகளைக் கொண்டு கவிதை இயற்றல் நலம் என்கிறார்.
            கவிதையில் இடம்பெறும் ஆசிரியரின் கூற்று, தற்கூற்றின் பண்பு, கவிதை அமைப்பில் உள்ள உரையாடல்களின் அமைப்பு முறைமை, புதுக்கவிதை நாட்டார் மக்களின் வடிவ முறையை ஏற்று வரும்போது அந்த வடிவத்தைத் தனதாக்கிக் கொள்ளல், முந்தைய கவிதை வடிவில் கூறப்பட்ட வடிவம் மீண்டும் வரின் அதன் சிதைவுத் தன்மையை ஏற்றல், கவிதையில் வரும் சீருக்காகச் சொல்லின் வடிவைச் சிதைத்து எழுதும் போக்கு முதலிய பல்வேறு விதமான செய்திகள் ஒழிபு செய்திகளாக ஒழிபியலில் கூறப்பட்டுள்ளன.
            இவ்வாறு இன்றைய வாழ்க்கை முறைகளுக்குத் தொடர்புடைய போக்குகளில் புதுக்கவிதை இலக்கணம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது.
மரபிலக்கண வரையறை : புதுக்கவிதையைக் கட்டமைத்தல்
            தமிழில் கிடைக்கப்பெறும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். இது பிற்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பலவற்றிற்கும் இலக்கணம் கூறும் நூலாகவும் திகழ்கிறது. மேலும் பல கோட்பாடுகளை வகுத்துச் சொல்லும் நூலாகவும் உள்ளது.
            விருந்தே தானும்
            புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.                                                       (தொல்.செய்.நூ.231)
என்னும் நூற்பாவின் வழிப் புதியதாகத் தோன்றும் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் தன்மையைத் தொல்காப்பியர் சுட்டிச் செல்கிறார்.
            தொல்காப்பியத்தின் கோட்பாடுகளுக்குள் புதுக்கவிதையைப் பொருத்திப் பார்க்கும் முயற்சியை வெ.இரத்தினமூர்த்தி மேற்கொண்டுள்ளார். தொல்காப்பியம் செய்யுளுக்குரிய உறுப்புகளாக 34 வகைகளைக் குறிப்பிடும். இவற்றில் முதல் ஆறு உறுப்புகள் நீங்கலாக ஏனைய உறுப்புகளின் மூலம் புதுக்கவிதையினுள் உள்ள பாங்கைச் சிறப்பாக விளக்குகிறார். புதுக்கவிதையினுள் இடம்பெறும் ஒலிநயம், பிறமொழி சொற்கலப்பு, நூற்பா, வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல், தாலாட்டு, ஒப்பாரி ஆகிய வடிவங்கள் புதுக்கவிதையினுள் இடம்பெறும் பாங்கைச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். மேலே சுட்டப்பெற்ற வடிவங்களிலான புதுக்கவிதையினுள் காணப்பெறும் எதுகை, மோனை, இயைபு, முரண் போன்ற யாப்பியல் கூறுகளின் நயங்கள் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன.
            நூற்பா, மந்திரம், பிசி, அங்கதம், முதுமொழிகளில் அமைந்துள்ள மோனை, எதுகை, இயைபுத் தொடைகள் ஆசிரியப்பா, வெண்பாக்களில் அமைந்துள்ள பொழிப்பு, ஒரூஉத் தொடைகள் போல ஓசை நயத்துடன் அமையவில்லை. இயல்பாக ஒலிநயம் வேண்டுமிடத்தில் அமைகின்றன. பாவகைகளில் அமையும் ஓசை நயமுடைய தொடைகளுக்கும், நூற்பா, பிசி முதலிய தொடைகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இஃது ஆகும். இந்த வேறுபாடு, இவ்விரு வகைக்கும் இடையே ஓசை வேறுபாட்டை ஏற்படுத்துவனவாகும். (வெ.ரத்தினமூர்த்தி, தொல்காப்பிய புதுக்கவிதையியல், ப. 34)
            புதுக்கவிதையில் கையாளப்பெறும் தொடையமைதிகள் மரபு கவிதைகளில் இடம்பெறும் தொடையமைதியைக் காட்டிலும் நயம் குறைந்தே உள்ளது.
            கவிதையின் ஆக்கத்தில் உள்ளடக்கத்திற்கு இணையாகக் கூறுப்படுவது உத்தி ஆகும். சங்ககாலம் தொடங்கி இன்றுவரை சிறந்து விளங்கும் கவிதைகளைப் பார்த்தால் இந்த உண்மை தெற்றெனப் புலப்படும். கவிதையின் ஆளுமை தன்மையை நிர்ணயிப்பது உத்தியே ஆகும். புதுக்கவிதை உள்ளடக்கத்திற்கேற்ற வடிவத்தை மட்டுமல்ல உத்திகளையும் நாடியது. உள்ளடக்கத்தை வேகத்துடனும் கூர்மைச் செறிவுடனும் வெளியிடப் புதிய உத்திகளை நாடியது. இயற்கையாகவே வெடிப்புற நேர்படப் பேசிய புதுக்கவிதை சமூகப் போக்கின் விளைவாக மறைமுகமாகப் பேசவும் சுற்றி வளைத்துப் பேசவும் பூடகமாய்ப் பேசவும் உத்திகள் பயன்பட்டன (அரங்கராசு, தமிழ்ப்புதுக்கவிதை திறனாய்வு, ப.269) எனப் புதுக்கவிதையில் இடம் பெறும் உத்திகளின் இன்றியமையாமையையும் பயன்பாட்டையும் அரங்கராசு விளக்கிச் செல்வார்.
            தொல்காப்பியச் செய்யுள் உறுப்பு கோட்பாடுகள் பெரும்பாலும் கவிதையின் உத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் யாப்பு, மரபு, தொடை, நோக்கு, கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன் முதலிய தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் புதுக்கவிதையில் உத்திகளாகக் கையாளப்பெறும் முறைமைகள் குறித்து வெ.ரத்தினமூர்த்தி ஆராய்ந்துள்ளார். அவற்றோடு மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் ஆகிய இவ்வெட்டு கூறுகளும் இடம்பெறும் தன்மையையும் விளக்கியுள்ளார். எண்வகை வனப்புகளான அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு போன்றவற்றின் பங்கும் சிறப்பாக ஆராயப்பெற்றுள்ளன. மேலும் திணைக்கோட்பாடு அகம் மற்றும் புறத்திணைகளின் வழியே விளக்கப்பட்டுள்ளன.
தொகுப்புரை
-        செழுமையான கவிதை இலக்கிய மரபில் தமிழ்க் கவிஞர்கள் வளர்ந்து வருகின்றனர். அவ்வாறு வளர்ந்து வரும்போது புதுக்கவிதையின் தாக்கம் மேலைத்தேயக் கவிஞர்களின் கவிதையின் மூலம் ஏற்படுகின்றது. மரபும் - புதுமையும் இணைந்து பிறக்கும் கவிதையில் புதுமையின் வீச்சும் மரபின் சாயலும் கட்டாயம் இடம் பெறும். எனவேதான் தொடக்க காலங்களில் புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்ட தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் வரை மரபின் நீட்சி தென்படவே செய்கின்றன.
-        புதுமைப்பித்தன், கு.ப.ரா., தொ.மு.சி., சி.செல்லப்பா, சி.மணி போன்றோர் புதுக்கவிதைக்குக் கட்டாயம் இலக்கணம் வேண்டும். அவற்றிற்கு மோனை, எதுகை முதலான தொடைகளும் மாவிளங்காய், தேமாங்கனி முதலான வாய்பாடுகளும் வேண்டும் என்ற கருத்துகளில் நின்றுள்ளனர். கடைசி வரை இக்கருத்துகளில் நின்றவர்கள் தொ.மு.சியும் புதுமைப்பித்தனும்தான். சி.சு.செல்லப்பா, பிரமிள் போன்றோர் முன்கொண்டிருந்த கருத்துகளிலிருந்து நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
-        தொடக்ககால எழுத்து பத்திரிகைகளில் எழுதி வந்த கவிஞர்களின் கவிதைகள் மரபுக்கவிதையின் சாயலிலேயே அமைந்திருந்ததையும் காணமுடிகிறது. அவ்வாறு இருந்ததற்குக் காரணம் மரபிலக்கணப் பயிற்சியைக் கவிஞர்கள் பெற்றிருந்ததே ஆகும்.
-        தமிழ் யாப்பியலின் புறநடைகள் புதுக்கவிதைக்குத் துணை செய்வனவாக உள்ளன. மரபுக் கவிதைகள் காலமாற்றத்திற்குகேற்ப மாறுபடுவதுபோல் புதுக்கவிதையின் வடிவமும் மாறுபட்டுள்ளது. ஆனால் புதுக்கவிதையினுள் மரபான யாப்புக் கூறுகள் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.
-        காலமாற்றத்தின் தேவையை உணர்ந்த யாப்புநூல் இடையில் வந்த யாப்பியல் கூறுகளுக்கும் இலக்கணம் வகுத்துள்ளது. அந்த வகையில் புதுக்கவிதைக்குரிய இலக்கணத்தை யாப்புநூல் சுட்டியுள்ளது. விரிவான நிலையில் இலக்கணம் வகுக்காவிட்டாலும் கன்னி முயற்சியாக இது உள்ளது.
-        மரபான யாப்பிலக்கண போக்கில் புதுக்கவிதைக்கு இலக்கணம் கூறும் தன்மையில் புதுக்கவிதை இலக்கணம் என்னும் நூல் திகழ்கிறது. மரபான பாவகைகளை உள்வாங்கியும், புது வரவான படிமம், குறியீடு, மீமெய்மை போன்ற உத்திகளுக்குரிய இலக்கணத்தையும் இந்நூல் சுட்டிச்செல்லும் பாங்கு சிறப்பான நிலையில் போற்றத்தக்கதாக உள்ளது. வகுத்துச்செல்லும் இலக்கணம் ஒவ்வொன்றுக்குமான எடுத்துக்காட்டுகளைப் புதுக்கவிதைகளிலிருந்தே எடுத்துக் காட்டியிருப்பது மேலும் இந்நூலுக்குச் சிறப்பு சேர்த்துள்ளது.
-        தொல்காப்பியர் சுட்டும் 34 செய்யுள் உறுப்புகளில் 28 உறுப்புகளுள் புதுக்கவிதையைப் பொருத்திப் பார்க்கும் தன்மையையும், அதற்குரிய எடுத்துக்காட்டுகளைத் தருதலையும் சிறப்பான முறையில் ரத்தினமூர்த்தி மேற்கொண்டிருப்பது பாராட்டும் நிலையில் உள்ளது.
-        இன்றைய காலகட்டத்தில் புதுக்கவிதை புதிய பரிமாணத்தை அடைந்துவிட்ட நிலையிலும் அதில் மரபான யாப்பியல் கூறுகள் காணக்கிடப்பதைப் பார்க்க முடிகின்றது.
துணைநூற் பட்டியல்
1.   அரங்கராசு, தமிழ் புதுக்கவிதை திறனாய்வு, சென்னை, 1987.
2.   இராஜேந்திரன், புதுக்கவிதை இலக்கணம், சென்னை, 2005.
3.   கந்தசாமி, சோ.ந., தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் - முதல்           தொகுதி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989.
4.   சரவணத்தமிழன், ச., யாப்பு நூல் (பாவும் உரையும்), இயற்றமிழ்ப் பயிற்றகம், திருவாரூர்,            1981.
5.   செல்லப்பா, சி.சு., தமிழில் இலக்கிய விமர்சனம், எழுத்து பிரசுரம், சென்னை, 1984.
6.   ஞானக்கூத்தன், கவிதைக்காக, மதி நிலையம், சென்னை, 2002.
7.   தொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், க.வௌ;ளைவாரணன்           (ப.ஆ.), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, முதற் பதிப்பு, 1989.
8.   மணி, சி. யாப்பும் கவிதையும், சந்தியா பதிப்பகம், சென்னை, 2006.
9.   மணிகண்டன், ய., தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை, 2001.
10. ரத்தின மூர்த்தி, வெ., தொல்காப்பிய புதுக்கவிதையியல், சென்னை, 1998.
11. ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு, தமிழினி, சென்னை, 2002.
12. வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், 2009.


Comments

Popular posts from this blog

திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள் (பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு ஆய்வுகளை முன்வைத்து)

நாலடியார் யாப்பியல்: யாப்பருங்கல விருத்தியுரை